Saturday, October 10, 2015

“பலே பாலு”வுடன் ஒரு பயணம் - 02

         நான் ஒரு எழுத்தாளன் கிடையாது,ஒரு படைப்பாளியும் அல்ல.ஒரு ரசிகன் மட்டுமே.சித்திரக்கதை ரசிகன்.அதுவே என்னை எழுதவும் தூண்டியது.சற்று மிகைப்படுத்தி சொல்வதானால் . . . ! வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டியதும்,ஏதோ ஒரு வகையில் என்னை பல களங்கலுக்கு அழைத்துச்சென்றதும் சித்திரக்கதைகளே எனலாம் (எனது முதல் பதிவு வாசித்தவர்களுக்கு நான் இவ்வாறு கூறுவதற்கான காரணங்கள் புரியும்.
           ஒரு வேகத்தில் பிளாக் ஆரம்பித்தாயிற்று.நமது தொலைக்காட்சித்தொடர்களில் போடுவது போல “தொடரும்” என்று போட்டு முதல் பதிவையும் முடித்தாயிற்று. அடுத்தது என்ன ? தமிழில் ’டைப்புவது’ புதிது என்பதால், மிதமான வேகத்திலேயே 'type' செய்ய முடிகின்றது.இருந்தாலும் காமிக்ஸ் பற்றிய நமது நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதும் கலந்துரையாடுவதும்தான் நமக்கு பிடித்தமான விக்ஷயங்களாயிற்றே. . . So let's start an another episode . . . !

அதற்கு முன்னர், என் முதல் காமிக்ஸ் வாசிப்பான “கொலைகாரன் கோட்டை’’ புத்தகத்தின் அட்டைப்படத்தை அனுப்பிய நண்பர் திரு.மாயாவி சிவா அவர்களுக்கு நன்றி.



  ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமையும் வந்தாயிற்று,அப்பாவிற்கு முன் நான் புறப்பட்டு தயாராக நின்றிருந்தேன்.அப்பாவிடம் புத்தகக்கடை வரும்வரை ‘பலே பாலு’ புத்தகத்தைப்பற்றியும் அவன் செய்யும் சாகஸங்களைப்பற்றியுமே பேசிகொண்டு வந்தேன். அவரும் சிரிய புன்முறுவலுடன் நான் சொல்வது அனைத்தையும் கேட்டுக்கொண்டே வந்தார்.நீதிராஜன் புத்தகக் கடைக்கு அருகில் வந்ததும் நான் முதல் ஆளாய் ஓடிச்சென்று ‘பலே பாலு’ புத்தகத்தைப்பற்றி விளக்கிகூற அவருக்கும் ஒருவாராக புரிந்து, அங்கு தொங்கவிடப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குள் தேடத்தொடங்கினார். தேடினார் . . . தேடினார் . . . தேடிக்கொண்டே இருந்தார்.நான் பொருமையிழந்து போய் புத்தகக்கடையை அண்ணாந்து பார்த்து நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். எங்கு பார்த்தாலும் பலவித காமிக்ஸ் தொங்கவிடப்பட்டிருந்தது.இருப்பினும் என் மனதும்,கண்களும் ‘பலே பாலு’-வைத் தேடிகொண்டிருந்தது.என் சகநண்பன் வைத்துள்ள புத்தகம், அதற்கு அவன் பேசிய விலை,அப்புத்தகத்தில் நான் படித்த ஒன்றிரண்டு பகுதிகளின்(EPISODES) தாக்கம் இவையெல்லாம் சேர்ந்து ‘பலே பாலு’-வைத் தவிர வேறு எதையும் நினைக்கத்தோன்றவில்லை.

            அப்பா கடைக்காரரையும்,அவர் தேடுவதையுமே பார்த்துக்கொண்டிருந்தார்.நான் அப்பாவையும், கடைக்காரரையும், புத்தகங்களையும் மாறி. . . மாறி பார்த்துக்கொண்டிருந்தேன்.கடைக்காரர் மீண்டுமொருமுறை கடையின் உள்ளே சென்று தேடித்திரும்பினார்.அவரையே பார்த்துக்கொண்டிருந்த என்னை நோக்கி ‘அந்த புத்தகம் ஸ்டாக் இல்ல தம்பி....!’ என்றார்.அதிகபட்ச எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை நான் அப்போது உணர்ந்தேன்.ஏமாற்றத்துடன் அப்பாவை நோக்கித்திரும்பினேன். அப்பா என்னை சமாதானம் செய்யும் விதமாக என் தலையை வருடிகொடுத்துக்கொண்டே. . . கடைக்காரரிடம் “அந்த மாதிரி வேற புத்தகம் இருந்தால் கொடுங்கள் . . .!” என்று கேட்க, அவரும் “சார் . . . நிறைய காமிக்ஸ் புத்தகம் இருக்கு சார், என நாலைந்து காமிக்ஸ் புத்தகங்களை எடுத்துக்கொடுத்தார். ‘பலே பாலு’ கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்திலும், கோபத்திலும் அதைத்தவிர வேறுபுத்தகம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு, கடையின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டு வெருமையுடன் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்பா கடைக்காரரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.
     
    வாங்கப்பா . . . போகலாம் ! என்று அப்பாவை கோபத்துடன் அழைத்தேன். “என் பொண்டாட்டி கூட அந்த புத்தகத்த வச்சி படிச்சிட்டு இருந்தாங்க, எங்க வச்சிருக்காங்கனு பார்க்கனும்!”என்று கடைக்காரர் கூறுவது கேட்டது.(பல நேரங்களில் நீதிராஜனுடன் அவரது மனைவியும் கடையில் இருப்பது வழக்கம்). அப்படியாவது அந்த புத்தகம் என் கையில் கிடைத்துவிடாதா என்ற என் எண்ணமும் பொய்த்துப்போனது.

  சந்தையிலிருந்து திரும்பும்போது நான் அமைதியாக நடந்துகொண்டிருந்தேன்.அப்பா எனக்கு ஆறுதலலிக்கும் விதமாக பேசிக்கொண்டே வந்தார். “அங்கு பார்த்த காமிக்ஸ் பற்றியும்,ஏன் நீ கேட்ட புத்தகம் மட்டும் வேண்டும் என்கிறாய். . . அங்கு இன்னும் நிறைய ஏன் அதைவிட நல்ல புத்தகங்கள் கூட இருந்திருக்கலாம் அல்லவா...? நீ ஏன் அதையெல்லாம் படிக்கக்கூடாது!” என்கிற தோரனையில் என்னை சமாதானப்படுத்த முயல்வதாக நினைத்திக்கொண்டேன், கொஞ்சமுமாய் சாமாதானமும் ஆனேன்.
 
   வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் எனக்கு அந்த புத்தகம் கிடைக்கவில்லை என்று கூறி ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தேன்.பள்ளியில் நடக்கும் விசயங்களை அம்மாவிடம் பகிர்ந்துகொள்வது என்னுடைய வழக்கமாதலால், ‘பலே பாலு’ விசயத்தையும் அம்மாவிடம் போட்டு வைத்திருந்தேன்.அம்மாவும், “ஏண்டா? அப்பாதான் அதே மாதிரி வேற புத்தகம் நிறைய இருந்ததுனு சொல்றார்ல, அதுல எதுனா ஒன்னு வாங்கிட்ருக்க வேண்டியதுதான. . . !, என்றார்.சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாய், “அப்பா, அந்த கடைக்காரர்கிட்ட என்னப்பா பேசிட்டிருந்தீங்க . . . ? என்றேன்.இல்லப்பா... அந்த புத்தகம் ஒன்னு அவுங்க பையன்கிட்ட இருக்காம் அந்தப்பையன் படிச்சதும் புத்தகத்தை வாங்கிதரமுடிமான்னு கேட்டுப்பார்த்தேன், என்றார். ம்....... திரும்பவும் முதல்லர்ந்தா . . . ! என எனக்கு மண்டை கிறுகிறுத்தது.முதல் முதலாக யாரோ ஒரு பெயரறியா, முகமறியா பையன்மேல் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.எனக்கென்றிருந்த புத்தகத்தை அவன் அபகரித்துக்கொண்டதாக நான் நினைத்துக்கொண்டதன் விளைவே அந்தக் கோபம்.
 
   அப்பா, அதெல்லாம் ஒன்ணும் வேணாம்ப்பா. . . நாம அங்க இருக்கிறதில ஏதாவது ஒரு புத்தகம் வாங்கிகலாம்ப்பா . . . என்று சொல்லி முடிக்கும்முன், அப்பா பையில் இருந்து தடிமனான ஒரு புத்தகத்தை எடுத்துக்காண்பித்தார் அதே புன்முறுவலுடன்,நான் ஓடிவந்துகட்டிக்கொண்டு புத்தகத்தை ஆசையுடன் வாங்கிப்பார்த்தேன். “The லயன் Top 10 ஸ்பெக்ஷல்” - கண்கள் ஆச்சரித்தில் விரிய புத்தகத்தை திருப்பி, திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.சுருங்கச்சொல்வதானால் அந்த வயதில் வேறு எதற்காவும் நான் இவ்வளவு மகிழ்ந்தது கிடையாது.இன்றளவும் என் காமிக்ஸ் சேகரிப்பில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததும், நேசித்து பாதுகாக்கும் புத்தகமும் இதுவே.

 பின்குறிப்பு: “பலே பாலு” கதையை நீண்ட காத்திருப்பிற்கு பின் , அதாவது 18 வருடங்கள் கழித்து சமீபத்தில் ஒரு நண்பர் உதவியுடன் படித்து முடித்தேன்.ஸ்ப்ப்பா . . . .
- பயணம் தொடரும்  . . .


7 comments:

  1. தொடர்ந்து உங்கள் மலரும் நினைவுகளைப் பதிவு செய்திட வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. . . உங்கள் நல்லாதரவு என்றும் தேவை . . .

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. @ சண்முக சுந்தரம்

    அடடே..உங்கள் நண்பர்களும் பலேபாலுவின் சேட்டையை சொல்லி..பத்தவெச்சாங்களா..! அன்று நண்பர்கள் சொன்ன கதைக்கும், பதினெட்டு வருடங்களுக்கு பின் நீங்க படிச்ச கதையும் ஒத்து போச்சா..? உங்க நினைவில் இருந்த கதையை படிக்க முடிந்ததா சண்முகம்..??

    ReplyDelete